December 11, 2010

கடல்தாண்டி செல்லும் கனவுகளுடன் நான் ....

கண்கள் பேசும் காதல்மொழியும்
கன்னியின் மனதில் தோன்றும் கனவுகளும்
அழகாய் மலரும் நாளே
தித்திக்கும் திருமண நாள் !!

கண்களில் சந்தோசம் வருத்தம்
மாறிமாறி வந்து போக
மனம் கவர்ந்த மணவாளன் கரம் பிடித்து
தாயே உன்னை தனித்து விட்டு செல்கிறேன் ...

திருமதியாக திருமண உறவு…
வெகுமதியாக வெளிநாடு வரவு..!
தூரமானது அப்பாவின் நகைச்சுவை…
ஏக்கமானது அம்மாவின் அறுசுவை..!

அரபுமொழி பேசும் அந்நிய
முகம் கண்டு படபடப்பு…
அமுதமொழி பேசும் அன்பு
முகம் தேடி பரிதவிப்பு..

உள்ளம் நிறைந்த பூரிப்பில்
உறவுகளோடு விழாக்கள் அங்கே..
உதடு பிரியா புன்னகையில்
புதியவரோடு விருந்துகள் இங்கே

துவைக்க ,பாத்திரமலச பட்டன்
தட்டும் இயந்திர வாழ்க்கையிங்கே..
அம்மாவுக்கு உதவியாய் துவைத்தலசிய
இனிமையான இயல்பு வாழ்க்கையங்கே..

அதிகாலை ஆலய மணி
ஒசை கேட்டது அங்கே..
பின்காலை அலார மணி
ஓசை கேட்கிறது இங்கே..

குதூகலமாய் குடும்பத்தோடு நிலாச்சோறு
உண்டு களித்தது அங்கே..
அமைதியாய் கணவரோடு கணினிச்சோறு
உண்டு களிப்பது இங்கே…

ஆதரவாய் தலை சாய்க்க
அம்மா மடி அங்கே..
தனிமையிலே தலை புதைக்க
தலையணை மடி இங்கே

அண்டை வீட்டில் அறியா முகங்கள்
பேசவும் முடியா புது மொழிகள்
விடியுமுன் வேலை செல்லும் கணவன்
நடுநிசி வரை வெற்றுச்சுவர்களோடு நான்..!!

இணைய உலாவலில் தொடங்கி
தொலைக்காட்சித் தொடரில் தொலைந்து
தனக்குள் பேசி தானாகச் சிரித்து
தானே சமைத்து தனியாக உண்டு
தனிமையோடுப் போராடினேன் தனியாக...!!

அக்கறைப்படவும் ஆளில்லை
அவசரத்தில் உதவவும் யாருமில்லை
அம்மாவிடம் பேசும் போது மட்டும்
அழுகையை அடக்கம் செய்துவிட்டு
வாய் வலிக்கும் சிரிப்போடு
"ஆகாயம் தொடும் கட்டிடங்கள்
அரண்மனை போல் வீடு
அருமையான நாடு
சொர்க்கத்தில் வாசம்" என்ற பொய்களோடு..!!

வெளிநாட்டில் வாழ்க்கை
வளமான வசதிகளோடு
கை நிறையப் பணத்தோடு
மனிதர்களோ அசுர வேகத்தோடு..!!

மனது மட்டும்- எப்போதும்
வெறுமையோடும்!! ஏக்கத்தோடும்..!!
மனசுக்குள் ஊரின் வாசம்..
மழையில் ஊறிய மண்வாசமாய்….!!

கடல்தாண்டி செல்லும் கனவுகள் யாவும்
கண்முன்னே வந்து நிற்க
ஏங்குகிறேன் அம்மா மடியில்
மீண்டும் ஒருகணம் தலை சாய்க்க....

No comments:

Post a Comment