May 29, 2018

~~நெகிழி~~

~~நெகிழி~~

வண்ண வண்ண மலர் சூடி

வாய் பிளந்து பார்த்தாயே
வட்டமென சதுரமென
வித விதமாய் வந்தாயே
இன்றென நாளையென்ன
பக்குவமாய் நீ இருக்க
பாழாய் போனதடி
பாவிமக்கள் வாழ்க்கையடி
பால்வார்த்த பூமிக்கு
பால்டாயிலாய் வந்தாயோ
வளம்பூர்த்த மண்ணுக்கு
வினையருக்க வென்றாயோ
நீடுடி நீ வாழ்க
நிலமெல்லாம் கெடுத்தாயே
நெஞ்சமெல்லாம் படபடக்க
பலநோய்கள் தந்தாயே
நிலமென்ன நீரென்ன
காசுக்கு உன்னைப்பெற்று
மூச்சுக்கு மறைப்பூட்டி
மாசுக்கு பயந்தோமே
புதுசுக்கு ஆசைப்பட்டு
பழசெல்லாம் மறந்தாச்சு
இயற்கைக்கு ஆசைப்பட்டு
இயன்றதெல்லாம் இழந்தாச்சு
சணல் கயிற்று சாபமோ
மஞ்சப்பையின் கோபமோ
இல்லை எல்லாம் தந்த
இயற்கையின் இச்சையோ
நெஞ்சோடு நெகிழ்வித்து
நிம்மதியாய் போனதெல்லாம்
நிலையின்றி நாம் வாழ
'நெகிழி'யால் மறைவோமோ..


-சுகி

September 13, 2017

சென்ரியூ

1.
கைநாட்டு மனிதனுக்கு
பிச்சைப் போட்டு
திருவோடு ஏந்துகிறான்
வெள்ளை சொக்கா வேலைக்காரன்..

#இன்றைய_அரசியல்_நிலை

2.
கல்லறையில் மலர்வளையம்
உறங்கும் மனிதனுக்கா
இல்லை இன்று
மருண்டு கெடக்கும் மலர்களுக்கா..

3.
மல்லிகையின் நறுமணம்
விதவைக்கு கிட்டியது
நேற்றைய மறுமணத்தில்..

4.
ரத்தம் அவனுக்கென்றால்
பரிவு பாசம் ..
அதே எனக்கென்றால்
கேலிப்பார்வை..
மலரான மொட்டின் முதல் குமுறல் 

September 1, 2017

கூ.. கூவம்.. கூடாரம்..

கூ.. கூவம்.. கூடாரம்..

கள்ளாட்ட கட்சிக்குள்ளே
கலைபட்டுக்கிடக்கிறது
கதிராமங்கலம் ..

கருக்கும் தீ அங்கு
கருவறுக்க தானோ..
கனவோடு பிறந்த உயிர்கள்
கவலையோடு மறையதானோ..

கதிரருக்கும் கைகளுக்கும்
கட்டாயம் விலக்கில்லை
கடனென்னும் சொத்தோடு
கழுத்தறுத்து உயிரில்லை

குறையில்லா நாடின்று
குழிக்குள்ளே கிடக்கிறது
கல்வித்தரம் குறையுண்டு
கடனோடு கிடக்கிறது

கிடத்தியவன் கேணையென்னில்
கலியுகம்தான் தொடங்கியதோ
கயவனவன் கட்சிதனில்
கலர்கலராய் மலர்கிறதோ

குறைகூறும் கெழவிக்கும்
கூழுக்கு வழியில்லை
கூட்டத்துக்கு போனாளென்றால்
கறிசோறும் மறுப்பதில்லை

கள்ளிப்பால் காலம்போயி
கட்சினாலே மறைகின்றோம்
கேக்காத காதுகளுக்கு
கையில் மையிட்டு அழைக்கின்றோம்

கூடாரம் போட்டுக்கிட்டு மக்களை
கோமாளி ஆக்கியதேன்
கூவத்தூர் கொண்டாட்ட
குழுவிங்கு அடுத்தயிடம் தேடியதேன்

கூரில்லா நாட்டுக்குள்ளே
குதிரோட்டம் விட்டவனெவனோ
கூவநதி கரையினிலே
கழிவுகளை விட்டவனவனோ

கச்சத்தீவும் கிடைக்கவில்லை
கடல்சென்ற மீனவனும் கரையிலில்லை ..
காணாமல் போனோர் பட்டியலில் சேர்ந்தது போதும்
களையான ஆட்சிக்கு முற்றொன்று வைத்திடுவோம்

- சுகி 

August 28, 2017

தீ பந்தம்

என் கண்ணீரைகேக்கத்தான்
நாதியில்லை ஊருக்குள்ள
உங்கிட்ட கொஞ்சம் சொல்றேன்
காதுகொடுத்து கேளுமய்யா..

உச்சாணி கொண்டையில
உஷ்ணத்தை வெச்சிருக்கேன்
ஊருக்குள்ள ஒண்ணுன்னா
உனக்குமுன்ன நானும்வாரேன்
நல்லதென்ன கெட்டதென்ன
நடுநிலைய இருக்கமாட்டேன்
உதவின்னு கேட்டுபுட்டா
உசுரையும் தந்திடுவேன்
பச்சைத்தண்ணி பாத்தபோதும்
பயத்துல நான் நடுங்க
படுபாவிமக்க யாரும்
இங்க என்ன புரிஞ்சுக்கல..

நேத்து வந்த கிராதகிக்கு
பல்லிளிச்சு பாத்தீங்களே
தேவைக்கு என்ன நிறுத்திப்புட்டு
தேவதைனு அவகிட்ட போறீங்களே
கட்டையில போறப்போ
அவ கூட சாவாமட்ட
கடைசிவரை நான் வந்து
என் உசுரையும் தந்திடுவேன்
முறைக்காக வெச்சாலும்
மனசார பாத்திடப்பா
அப்போதான் என் கட்டை
முழுசாதான் எரியுமப்பா...

சேரி சாவுக்கு நேரமாச்சு
நான் இப்போ போகோணும்
பந்தமெங்க பந்தமெங்கனு
கவலை குரல்கேக்குதப்பா.. !!

இப்படிக்கு "தீ பந்தம்"

- சுகி

August 23, 2017

காதல் சுரப்பியா ? காதல் உணர்ச்சியா ?

காதல் என்றால்
என்னவென்று தெரியாத 
ஆய்வுக்கூடங்கள் பல இருக்க ..
அரைநொடி பார்வையில் 
அனைத்தையும் புகுத்திடும்
மாயை இந்த காதல் !

கள்ளமில்லா கன்னிக்கும்

அவள் கதை தொடுத்த காவியனுக்கும்
கொஞ்சம் கொஞ்சமாய் 
எரிமலையாய் 
கக்கும் இந்த உணர்வுகளுக்கு 
உயிரே இந்த காதல் !

நெடுநாள் பழக்கமோ 

முன்ஜென்ம தொடர்போ
இல்லை 
பார்த்ததும் படர்ந்ததோ
ஏதவாயிருப்பின் 
முரணின்றி மேடைபோட்டு 
முத்தார சிரிக்கிறது 
இந்த காதல் ! 

உறவுகளை உடைத்து,

உணர்வுகளை தொடுத்து,
உடைமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்தது தான் 
இந்த காதல் !!

காதல் முழுதாய் 

உணர்ச்சியால் முகம்காட்ட 
சுரப்பிகள் மறந்து 
உணர்வுகள் பிறந்து 
சூட்சமாய் சொல்லினிக்க
செவுடனுக்கும் ஒலிகேக்கும் 
குருடனுக்கு விழிகிடைக்கும்..

காதல் பூப்போலே 

உணரத்தான் தொடவேண்டும் 
நுகரத்தான் மனம்வேண்டும்

சுரபிவழி வந்திருந்தால் 

முடிவில்லா காதலுக்கும் 
முதுமையிலே பிறப்பேது ?
முகம்பார்த்து மலர்வதுக்கும்
சுரபியிலே கெடுவுமுண்டு..

உணர்ச்சிபால் வரும்காதல் 

உடல்பார்த்து வருவதில்லை 
உணர்வோடு உருக்குலைந்து 
ஊக்கமதில் வாழ்வதுண்டு..

பிள்ளையாருக்கு பிறந்தநாள்


பிள்ளையாரே பிள்ளையாரே
பிறந்தநாளாம் உமக்குஇன்னிக்கு
முதல் கடவுள் முகத்தானே
முதல் வாழ்த்து நானும் சொல்லேன்

எருக்கம்பூ நாயகனே
இரக்கம் கொஞ்சம் காட்டுமய்யா
எழுத்துப்பிழை கூடாதுனு
சுழி போட்டு துவங்க போறேன்

புத்தாடை போடணுமுன்னு
பட்டாடை கேப்பீரோ
பலவண்ண மெழுகேத்தி
பகட்டா தான் மகிழ்வீரோ

கரிமுகத்து கணபதியே
கடைதிறக்க வாரீரோ
நான்செஞ்ச தின்பண்டம்
திகட்டும் வரை உண்பீரோ

உப்பென்ன இனிப்பென்ன
விதவிதமா உங்கத்தாரேன்
கொலு கொலு புள்ளைக்கு
கொழுக்கட்டை புடிச்சு தாரேன்

கனியுண்ணும் ஆசையிலே ஆறுமுகனை
மலையேத்திய ஐந்து கரத்தானே
பால்கனி படைச்சிருக்கேன்
பானைவயிறு நிரம்பும்வரை வயிறார உண்ணும்மய்யா

முருகனுக்கு மூத்தோனே
முரண்டுபிடிக்காம வாருமய்யா
நீ போட்ட முடியெல்லாம்
நீக்கத்தான் வேணும்மய்யா

சதுர்த்தி நாயகனே
சங்கடத்தை தீர்க்கத்தான் நீயும் இங்கு வாரீரோ
சங்கத்தமிழ் வளர்த்த மண்ணில்
செம்மொழி செழிக்க செய்வீரோ

- சுகி


July 13, 2017

~~** ( திருவிழா ஸ்பெஷல் ) **~~



சக்தி மாரியம்மா
சங்கடத்தை தீர்க்கவரா
சித்திர மாசம்பூரா
சீராட்டி பாக்கப்போறா

எங்கூரு நோம்பிக்கு
எல்லாத்தையும் கூப்பிட்டுப்புட்டேன்
நாலுகிழமை நடக்கும் பூசை
சுத்தவத்தம் வேணும் புள்ளை

மொத ஞாயிறு கெடாவெட்டி
நடுஜென்மம் நேரத்துல
ஊருஆம்பளைங்க ஒன்னுகூடி
முனியெல்லாம் ஓட்டிவிட

பொழுதொன்னு விடிஞ்சதுமே
பொட்டப்புள்ள நான் கேட்க
பூசாரி வான்பார்த்து போட்ட சோறு ( ரத்தசோறு )
முனி பூரா எடுத்துகிச்சு
ஊருஎல்லை பூராவும் கெட்டதெல்லாம் விலகிடுச்சு

மொதவாரம் மூணாம்நாலு (செவ்வாய் கிழமை )
ஊருசனம் ஒன்னுகூடி
எல்லாவீட்டு பொறி போட்டு
ஆத்தாளுக்கே அழைப்புவிட

மறுவாரம் மூணாம்நாலு
மங்கலமா ஆரம்பிக்க
ஆலமர கொம்பெடுத்து
கம்பம் ஒன்னு செஞ்சிபுட்டு
தீச்சட்டி அதுலேத்தி
ஆத்தாள அழைச்சிடுவோம்

சாய்ங்காலம் பூசையோட
மத்தளத்தை நிறுத்திப்புட்டு
ஊருசனம் சேந்ததுமே
பறையோட பாட்டுபடிச்சு
கம்பம் சுத்தியாடிடுவோம்

கிராமிய பாட்டுக்கும்
சலங்கையொலி ஆட்டத்துக்கும்
மணியங்கு பன்னண்டு அடிக்க
கச்சேரியை முடிச்சிடுவோம்

இந்த இடைப்பட்ட நாலு பூரா
காஞ்சி காமாச்சி
மதுர மீனாச்சினு
விதவிதமா அழைச்சிடுவோம்
பழமென்ன பூவென்ன
பணமென்ன பாலென்ன
பலகாரம் பலசெஞ்சு
பத்திரமா பாத்துக்குவோம்

மூணாம் வாரத்துல
மொதநாளு மொழுகிவிட்டு
ரெண்டாம்நாலு பூப்பறிச்சு
தொடர் மாலை வேணுமுன்னு எல்லாரும் பூக்கட்ட
ஊரு மனுஷன் முன்னின்னு
ஆத்தாளுக்கு வேணும்கிறதா
பக்குவமாய் பாத்துக்கிட

மூணாம் நாலு ராத்திரிக்கு
செட்டு லைட்டு ஜொலிஜொலிக்க
வெள்ளைக்குதிரை கூட்டிகிட்டு
கோயிலுக்கு கிழக்கால
ஆத்தாவுக்கு நகையெடுக்க

பரிமீது வந்த ஆத்தா
கடையுட்டு வரமாட்டா
ஆத்தாள மனங்குளிர
பாட்டோடு அழைச்சு வர
ஒரு வழிய சேர்த்திடுவா
அலங்காரத்தை தொடங்கிடுவா

திருவிழா ஊருக்குள்ள
வீரமகளா வந்திடுவா
ஊருசனம் ஒன்னொன்னையும்
கண்கூட பாத்திடுவா

ஊட்டுக்கொரு பொங்கலுனு
ஒருபானை பொங்கிதல்ல
வகைவகையா ருஷிருஷியா
பச்சமாவும் இடிச்சிடுவோம்

உச்சி வெயிலோட
மொளப்பாரி எடுத்துக்கிட்டு
பொங்கலும் பச்சமாவும்
பாசத்தோடு தூக்கிகிட்டு
ஊருசனம் சேர்த்ததுமே
கும்மியொன்னு அடிச்சிடுவோம்

பொழுதெறங்கும் நேரத்துல
நேர்த்திக்கடன் தீக்கணுமுன்னு
தீச்சட்டி தூக்கிக்கிட்டும்
செல்லுக்குத்தி ஆடிக்கிட்டும்
வாயில சூலத்தோட
வந்திங்க வணங்கிடுவோம்

மறுநாளு மஞ்சத்தண்ணிக்கு
மாமனெல்லாம் வந்து சேர
மொறப்பொண்ணு நாங்கெல்லாம்
மறைஞ்சு இருந்தே பாத்திடுவோம்
அக்கா மகளுக்கும் அள்ளிப்பூசிடுவோம்
அன்போடு மொறைசேர்த்து
ஆசையோட நெனஞ்சிடுவோம்

மறுப்பூசை வெச்சுப்புட்டு
பஞ்சாமிர்தம் கடைஞ்சுக்கிட்டு
ஊருப்பூர சொல்லிடுவோம்
பொழுதெரங்க குடும்பத்தோட
கோயில்கிட்ட வாருமைய்யா

நாலாம் வாரத்தோட
நோம்பி இங்க முடிஞ்சாலும்
நன்றி சொல்லி வணங்கிடுவோம்
நல்லதாயி உன்னால
நாங்களும் குளிர்ந்துட்டோம்
நாட்டுமக்க நலன் காக்க
நாடெங்கும் பாத்திடம்மா !!

- சுகி

கிட்டத்தட்ட ஒரு மாசம் திருவிழாவின் முக்கியநிகழ்வ மட்டும் சொல்லிருக்கேன்.. கொஞ்சம் பெருசா படிச்சாலும் திருவிழா போன நெனப்பு உங்களுக்கும் வந்துடும் னு நம்புறேன்.. எங்கூரு திருவிழாவை வந்து ரசிச்ச எல்லாருக்கும் நன்றி  🙏🙏🙏

July 10, 2017

யார் இந்த மலாலா ??


மிங்கோரா பெண்ணொருத்தி
மீட்டெடுத்த மெழுகுவர்த்தி
ஆண்களின் கொடுமைக்கு 
முடிவிட்ட வெட்டுக்கத்தி


தீவிரமாய் வாதிட்ட
தீயவனின் குண்டுக்கு
வாதத்தால் முற்றிட்ட
தீப்பிளம்பு தீர்க்கதரிசி
ஆணென்னும் அதிகாரம்
அரங்கேறும் வேலையினில்
புயலோடு போராட
முளைத்திட்ட முல்லையிவள்
சிதறிய உடல்களையும்
சீரில்லா உயிர்களையும்
சிந்தனையில் சேர்த்தி
ரத்தக்களமேறி
ராட்டின வாழ்விற்கு
முற்றொன்று வைத்தவள்
கலவிக்கு பெண் தேடும்
சமூகத்தில்
கல்விக்கும் கொடிஉயர்த்திய
அல்லாஹ்வின் திருமகள்
தலிபான் தடைகளுக்கு
தைரியத்தால்
பதில் உரைத்த
தங்கப்பெண் தாரகையிவள்
பசி என்று நின்னாலும்
பயத்தோடு உறைந்தாலும்
பட்சிபோல் பார்த்திரிந்து
பிஞ்சுக்கை தொடுப்பவள்
அல்லா விட்டு சென்ற
பிறை நிலா
பெண்மைக்கு சான்று
என் பெண்மை மலாலா !!
- சுகி

மலரென்னும் மங்கையவள்

செங்காந்தள் பூப்போலே 
செம்மேனி உடையவளோ 
ஆம்பல் நிறம்போலே 
அள்ளித்தரும் தாரகையோ 
அனிச்சம் பேர் இவளோ
அன்புக்கு சான்றிவளோ
காற்றாலை போல் வீசும் 
குவளை மணம் கொண்டவளோ 
குறிஞ்சி பூப்போலே 
கொஞ்சிடும் பைங்கிளியோ
வெட்சி மலராலே
வெட்கத்தில் திளைப்பவளோ 
செங்கோடுவேறினை போல்
செழுமையில் பிறந்தவளோ 
தேனிலே கலந்த புளிப்பாய்
தேமாவாய்  திகள்பவளோ
மலர்சூடும் மன்னனுக்கு 
மணிசிகையாய் வாழ்பவளா 
உந்தூழ் காம்பை போல் 
உறுதுணையாய் நிற்பவளோ 

கூவிளம் மலர்போலே
கூர்நோக்காய் காண்பவளோ 
ஏறுழம் பூப்போலே 
எதிரியினை எரிப்பவளோ
சுள்ளிக்கு ஈடுஇணையாய்
சுற்றத்தோர் ரசிப்பவளோ 
கூவிரம் பலன்போலே
குடும்பத்தை காப்பவளோ 
வடவனமாய் இல் நின்று 
பிணித்தானாய் போப்பவளோ 
வாகை மலர்சூடி 
மன்னவனை அழைப்பவளோ 
வான் பூங் குடசமாய் 
வறுமையிலும் வெல்பவளா
எருவைபுல்போலே 
எறும்பாய் உழைப்பவளோ 
சங்குப்பூக்கள் 
செருவிளை கருவிளை போல் 
இன்முகத்து பைரவியாய் 
பலம் சேர்க்கும் பைங்கிளியோ



July 7, 2017

நல்லதொரு விடியலை நோக்கி..

அஞ்சு பத்து சம்பாதித்தவன்
அயராமல் உறங்குகிறான்..
ஆயிர கணக்கில் சம்பாதிப்பவன்
ஆடிப் போயி கிடக்கிறான்..
இந்திய அரசின் அதிரடி மாற்றத்தால்
இஷ்டப்படி ஆடியவனும் இடிதாக்கிய மரமாய் நிற்கிறான்..
ஏடிம் சாலைகளில் ஈயாய் மொய்கிறான்
இயன்றவற்றை செல்லும் 'மணி'களாய் மாற்றிட..
தடாலடியாய் கொண்டு வந்த சட்டத்தால்
தடம் புரண்டு தான் கிடக்கிறது நடுத்தர வர்க்கம்..
ஏழாந்தேதி வாங்கிய சம்பளத்தில்
சரளாமாய் இல்லாவிட்டாலும்
சிறிதாய் வைத்த சேமிப்பும்
இன்று செல்லா காசுப் பட்டியலில்..
உண்டியலாய் கிடந்த சர்க்கரை டப்பாவும் புடவை மடிப்புகளும்
சத்தமின்றி வெளி வரப்போகிறது
சில்லரைகளாய் மாற்றிட..
வாயாடி கிழவிகளுக்கு
வெற்றிலையாய் இன்றைய விடியல்..
வசைப் பாடியே தின்று தீர்ப்பார்கள்
அரசாளும் அதிகாரிகளை..
சுருக்கு பை நோட்டுகள் யாவும்
சுவடில்லாமல் மறையும் வரை..
புதுமையாய் தெரிந்தாலும்
புயலாய் மாற்றினாலும்
மாசற்ற சமுதாயத்துக்கு
நாமும் கரம் கொடுப்போம்
நல்லதொரு விடியலை நோக்கி..
- சுகி