சக்தி மாரியம்மா
சங்கடத்தை தீர்க்கவரா
சித்திர மாசம்பூரா
சீராட்டி பாக்கப்போறா
எங்கூரு நோம்பிக்கு
எல்லாத்தையும் கூப்பிட்டுப்புட்டேன்
நாலுகிழமை நடக்கும் பூசை
சுத்தவத்தம் வேணும் புள்ளை
மொத ஞாயிறு கெடாவெட்டி
நடுஜென்மம் நேரத்துல
ஊருஆம்பளைங்க ஒன்னுகூடி
முனியெல்லாம் ஓட்டிவிட
பொழுதொன்னு விடிஞ்சதுமே
பொட்டப்புள்ள நான் கேட்க
பூசாரி வான்பார்த்து போட்ட சோறு ( ரத்தசோறு )
முனி பூரா எடுத்துகிச்சு
ஊருஎல்லை பூராவும் கெட்டதெல்லாம் விலகிடுச்சு
மொதவாரம் மூணாம்நாலு (செவ்வாய் கிழமை )
ஊருசனம் ஒன்னுகூடி
எல்லாவீட்டு பொறி போட்டு
ஆத்தாளுக்கே அழைப்புவிட
மறுவாரம் மூணாம்நாலு
மங்கலமா ஆரம்பிக்க
ஆலமர கொம்பெடுத்து
கம்பம் ஒன்னு செஞ்சிபுட்டு
தீச்சட்டி அதுலேத்தி
ஆத்தாள அழைச்சிடுவோம்
சாய்ங்காலம் பூசையோட
மத்தளத்தை நிறுத்திப்புட்டு
ஊருசனம் சேந்ததுமே
பறையோட பாட்டுபடிச்சு
கம்பம் சுத்தியாடிடுவோம்
கிராமிய பாட்டுக்கும்
சலங்கையொலி ஆட்டத்துக்கும்
மணியங்கு பன்னண்டு அடிக்க
கச்சேரியை முடிச்சிடுவோம்
இந்த இடைப்பட்ட நாலு பூரா
காஞ்சி காமாச்சி
மதுர மீனாச்சினு
விதவிதமா அழைச்சிடுவோம்
பழமென்ன பூவென்ன
பணமென்ன பாலென்ன
பலகாரம் பலசெஞ்சு
பத்திரமா பாத்துக்குவோம்
மூணாம் வாரத்துல
மொதநாளு மொழுகிவிட்டு
ரெண்டாம்நாலு பூப்பறிச்சு
தொடர் மாலை வேணுமுன்னு எல்லாரும் பூக்கட்ட
ஊரு மனுஷன் முன்னின்னு
ஆத்தாளுக்கு வேணும்கிறதா
பக்குவமாய் பாத்துக்கிட
மூணாம் நாலு ராத்திரிக்கு
செட்டு லைட்டு ஜொலிஜொலிக்க
வெள்ளைக்குதிரை கூட்டிகிட்டு
கோயிலுக்கு கிழக்கால
ஆத்தாவுக்கு நகையெடுக்க
பரிமீது வந்த ஆத்தா
கடையுட்டு வரமாட்டா
ஆத்தாள மனங்குளிர
பாட்டோடு அழைச்சு வர
ஒரு வழிய சேர்த்திடுவா
அலங்காரத்தை தொடங்கிடுவா
திருவிழா ஊருக்குள்ள
வீரமகளா வந்திடுவா
ஊருசனம் ஒன்னொன்னையும்
கண்கூட பாத்திடுவா
ஊட்டுக்கொரு பொங்கலுனு
ஒருபானை பொங்கிதல்ல
வகைவகையா ருஷிருஷியா
பச்சமாவும் இடிச்சிடுவோம்
உச்சி வெயிலோட
மொளப்பாரி எடுத்துக்கிட்டு
பொங்கலும் பச்சமாவும்
பாசத்தோடு தூக்கிகிட்டு
ஊருசனம் சேர்த்ததுமே
கும்மியொன்னு அடிச்சிடுவோம்
பொழுதெறங்கும் நேரத்துல
நேர்த்திக்கடன் தீக்கணுமுன்னு
தீச்சட்டி தூக்கிக்கிட்டும்
செல்லுக்குத்தி ஆடிக்கிட்டும்
வாயில சூலத்தோட
வந்திங்க வணங்கிடுவோம்
மறுநாளு மஞ்சத்தண்ணிக்கு
மாமனெல்லாம் வந்து சேர
மொறப்பொண்ணு நாங்கெல்லாம்
மறைஞ்சு இருந்தே பாத்திடுவோம்
அக்கா மகளுக்கும் அள்ளிப்பூசிடுவோம்
அன்போடு மொறைசேர்த்து
ஆசையோட நெனஞ்சிடுவோம்
மறுப்பூசை வெச்சுப்புட்டு
பஞ்சாமிர்தம் கடைஞ்சுக்கிட்டு
ஊருப்பூர சொல்லிடுவோம்
பொழுதெரங்க குடும்பத்தோட
கோயில்கிட்ட வாருமைய்யா
நாலாம் வாரத்தோட
நோம்பி இங்க முடிஞ்சாலும்
நன்றி சொல்லி வணங்கிடுவோம்
நல்லதாயி உன்னால
நாங்களும் குளிர்ந்துட்டோம்
நாட்டுமக்க நலன் காக்க
நாடெங்கும் பாத்திடம்மா !!
- சுகி
கிட்டத்தட்ட ஒரு மாசம் திருவிழாவின் முக்கியநிகழ்வ மட்டும் சொல்லிருக்கேன்.. கொஞ்சம் பெருசா படிச்சாலும் திருவிழா போன நெனப்பு உங்களுக்கும் வந்துடும் னு நம்புறேன்.. எங்கூரு திருவிழாவை வந்து ரசிச்ச எல்லாருக்கும் நன்றி 🙏🙏🙏
No comments:
Post a Comment