பேதையென்னும் மங்கையவள்
மலர்ச்சூட கண்டாயோ
மாலையிடும் வேலைதனில்
மெருக்கேற்ற வந்தாயோ
கன்னியிவள் கார்முகிலாய்
காலாட நடமாட
எதிர்வரும் கதிரவனை
காணாமல் செல்வாயோ..
நேரம்காலம் பாத்துபுட்டு
நேர்த்தியா போறவளே
நெடுந்தூரம் போனாலும்
பிறைக்கு முன்னே சுடரிடவா
பொழுதின்று முடியுமுன்னே
பூமகளாய் போனவளே
ஊர்க்காண ஒழுங்கோடு
நீ இங்கு வந்திடம்மா..
கண்ணாலம் முடிச்சதுமே
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்த மன்னனுக்கு
குறைதீர்ப்பாய் பூங்கொடியே
கால் மாதம் போனபின்னும்
காட்டேரி காத்திருப்பா
கருவொன்னும் காணலேயே
கணவனைதான் பூட்டிவைப்பா..
நிறை மாசம் தாண்டும் முன்னே
புள்ளைய தான் கணிச்சிருப்பா
காளைய பெத்துப்புட்டா
கச்சேரி வெச்சிருவா
கன்னிப்புள்ள பொறந்துபுட்டா
கள்ளிப்பால் கொடுத்துப்புட்டு
கருமாரி ஆக்கிடுவா..
தப்பி பொழச்சப்புள்ள
தடுமாறி போனாலும்
தூக்குல தொங்கவுட்டு
தூர்வாரி பேசிடுவா..
நான் பாடும் தாலாட்டில்
துயில்கொள் என் கண்மணியே
துட்சன் எங்கு வந்தாலும்
வீரம்கொள் பெண்மணியே
சாந்தமாய் நான் வாழ்ந்தும்
சங்கடங்கள் பல சேர்த்த
சேரியென்னும் சமூகத்தில்
சந்தனமாய் நீ மணப்பாயோ !!
- சுகி


