July 13, 2017

~~** ( திருவிழா ஸ்பெஷல் ) **~~



சக்தி மாரியம்மா
சங்கடத்தை தீர்க்கவரா
சித்திர மாசம்பூரா
சீராட்டி பாக்கப்போறா

எங்கூரு நோம்பிக்கு
எல்லாத்தையும் கூப்பிட்டுப்புட்டேன்
நாலுகிழமை நடக்கும் பூசை
சுத்தவத்தம் வேணும் புள்ளை

மொத ஞாயிறு கெடாவெட்டி
நடுஜென்மம் நேரத்துல
ஊருஆம்பளைங்க ஒன்னுகூடி
முனியெல்லாம் ஓட்டிவிட

பொழுதொன்னு விடிஞ்சதுமே
பொட்டப்புள்ள நான் கேட்க
பூசாரி வான்பார்த்து போட்ட சோறு ( ரத்தசோறு )
முனி பூரா எடுத்துகிச்சு
ஊருஎல்லை பூராவும் கெட்டதெல்லாம் விலகிடுச்சு

மொதவாரம் மூணாம்நாலு (செவ்வாய் கிழமை )
ஊருசனம் ஒன்னுகூடி
எல்லாவீட்டு பொறி போட்டு
ஆத்தாளுக்கே அழைப்புவிட

மறுவாரம் மூணாம்நாலு
மங்கலமா ஆரம்பிக்க
ஆலமர கொம்பெடுத்து
கம்பம் ஒன்னு செஞ்சிபுட்டு
தீச்சட்டி அதுலேத்தி
ஆத்தாள அழைச்சிடுவோம்

சாய்ங்காலம் பூசையோட
மத்தளத்தை நிறுத்திப்புட்டு
ஊருசனம் சேந்ததுமே
பறையோட பாட்டுபடிச்சு
கம்பம் சுத்தியாடிடுவோம்

கிராமிய பாட்டுக்கும்
சலங்கையொலி ஆட்டத்துக்கும்
மணியங்கு பன்னண்டு அடிக்க
கச்சேரியை முடிச்சிடுவோம்

இந்த இடைப்பட்ட நாலு பூரா
காஞ்சி காமாச்சி
மதுர மீனாச்சினு
விதவிதமா அழைச்சிடுவோம்
பழமென்ன பூவென்ன
பணமென்ன பாலென்ன
பலகாரம் பலசெஞ்சு
பத்திரமா பாத்துக்குவோம்

மூணாம் வாரத்துல
மொதநாளு மொழுகிவிட்டு
ரெண்டாம்நாலு பூப்பறிச்சு
தொடர் மாலை வேணுமுன்னு எல்லாரும் பூக்கட்ட
ஊரு மனுஷன் முன்னின்னு
ஆத்தாளுக்கு வேணும்கிறதா
பக்குவமாய் பாத்துக்கிட

மூணாம் நாலு ராத்திரிக்கு
செட்டு லைட்டு ஜொலிஜொலிக்க
வெள்ளைக்குதிரை கூட்டிகிட்டு
கோயிலுக்கு கிழக்கால
ஆத்தாவுக்கு நகையெடுக்க

பரிமீது வந்த ஆத்தா
கடையுட்டு வரமாட்டா
ஆத்தாள மனங்குளிர
பாட்டோடு அழைச்சு வர
ஒரு வழிய சேர்த்திடுவா
அலங்காரத்தை தொடங்கிடுவா

திருவிழா ஊருக்குள்ள
வீரமகளா வந்திடுவா
ஊருசனம் ஒன்னொன்னையும்
கண்கூட பாத்திடுவா

ஊட்டுக்கொரு பொங்கலுனு
ஒருபானை பொங்கிதல்ல
வகைவகையா ருஷிருஷியா
பச்சமாவும் இடிச்சிடுவோம்

உச்சி வெயிலோட
மொளப்பாரி எடுத்துக்கிட்டு
பொங்கலும் பச்சமாவும்
பாசத்தோடு தூக்கிகிட்டு
ஊருசனம் சேர்த்ததுமே
கும்மியொன்னு அடிச்சிடுவோம்

பொழுதெறங்கும் நேரத்துல
நேர்த்திக்கடன் தீக்கணுமுன்னு
தீச்சட்டி தூக்கிக்கிட்டும்
செல்லுக்குத்தி ஆடிக்கிட்டும்
வாயில சூலத்தோட
வந்திங்க வணங்கிடுவோம்

மறுநாளு மஞ்சத்தண்ணிக்கு
மாமனெல்லாம் வந்து சேர
மொறப்பொண்ணு நாங்கெல்லாம்
மறைஞ்சு இருந்தே பாத்திடுவோம்
அக்கா மகளுக்கும் அள்ளிப்பூசிடுவோம்
அன்போடு மொறைசேர்த்து
ஆசையோட நெனஞ்சிடுவோம்

மறுப்பூசை வெச்சுப்புட்டு
பஞ்சாமிர்தம் கடைஞ்சுக்கிட்டு
ஊருப்பூர சொல்லிடுவோம்
பொழுதெரங்க குடும்பத்தோட
கோயில்கிட்ட வாருமைய்யா

நாலாம் வாரத்தோட
நோம்பி இங்க முடிஞ்சாலும்
நன்றி சொல்லி வணங்கிடுவோம்
நல்லதாயி உன்னால
நாங்களும் குளிர்ந்துட்டோம்
நாட்டுமக்க நலன் காக்க
நாடெங்கும் பாத்திடம்மா !!

- சுகி

கிட்டத்தட்ட ஒரு மாசம் திருவிழாவின் முக்கியநிகழ்வ மட்டும் சொல்லிருக்கேன்.. கொஞ்சம் பெருசா படிச்சாலும் திருவிழா போன நெனப்பு உங்களுக்கும் வந்துடும் னு நம்புறேன்.. எங்கூரு திருவிழாவை வந்து ரசிச்ச எல்லாருக்கும் நன்றி  🙏🙏🙏

July 10, 2017

யார் இந்த மலாலா ??


மிங்கோரா பெண்ணொருத்தி
மீட்டெடுத்த மெழுகுவர்த்தி
ஆண்களின் கொடுமைக்கு 
முடிவிட்ட வெட்டுக்கத்தி


தீவிரமாய் வாதிட்ட
தீயவனின் குண்டுக்கு
வாதத்தால் முற்றிட்ட
தீப்பிளம்பு தீர்க்கதரிசி
ஆணென்னும் அதிகாரம்
அரங்கேறும் வேலையினில்
புயலோடு போராட
முளைத்திட்ட முல்லையிவள்
சிதறிய உடல்களையும்
சீரில்லா உயிர்களையும்
சிந்தனையில் சேர்த்தி
ரத்தக்களமேறி
ராட்டின வாழ்விற்கு
முற்றொன்று வைத்தவள்
கலவிக்கு பெண் தேடும்
சமூகத்தில்
கல்விக்கும் கொடிஉயர்த்திய
அல்லாஹ்வின் திருமகள்
தலிபான் தடைகளுக்கு
தைரியத்தால்
பதில் உரைத்த
தங்கப்பெண் தாரகையிவள்
பசி என்று நின்னாலும்
பயத்தோடு உறைந்தாலும்
பட்சிபோல் பார்த்திரிந்து
பிஞ்சுக்கை தொடுப்பவள்
அல்லா விட்டு சென்ற
பிறை நிலா
பெண்மைக்கு சான்று
என் பெண்மை மலாலா !!
- சுகி

மலரென்னும் மங்கையவள்

செங்காந்தள் பூப்போலே 
செம்மேனி உடையவளோ 
ஆம்பல் நிறம்போலே 
அள்ளித்தரும் தாரகையோ 
அனிச்சம் பேர் இவளோ
அன்புக்கு சான்றிவளோ
காற்றாலை போல் வீசும் 
குவளை மணம் கொண்டவளோ 
குறிஞ்சி பூப்போலே 
கொஞ்சிடும் பைங்கிளியோ
வெட்சி மலராலே
வெட்கத்தில் திளைப்பவளோ 
செங்கோடுவேறினை போல்
செழுமையில் பிறந்தவளோ 
தேனிலே கலந்த புளிப்பாய்
தேமாவாய்  திகள்பவளோ
மலர்சூடும் மன்னனுக்கு 
மணிசிகையாய் வாழ்பவளா 
உந்தூழ் காம்பை போல் 
உறுதுணையாய் நிற்பவளோ 

கூவிளம் மலர்போலே
கூர்நோக்காய் காண்பவளோ 
ஏறுழம் பூப்போலே 
எதிரியினை எரிப்பவளோ
சுள்ளிக்கு ஈடுஇணையாய்
சுற்றத்தோர் ரசிப்பவளோ 
கூவிரம் பலன்போலே
குடும்பத்தை காப்பவளோ 
வடவனமாய் இல் நின்று 
பிணித்தானாய் போப்பவளோ 
வாகை மலர்சூடி 
மன்னவனை அழைப்பவளோ 
வான் பூங் குடசமாய் 
வறுமையிலும் வெல்பவளா
எருவைபுல்போலே 
எறும்பாய் உழைப்பவளோ 
சங்குப்பூக்கள் 
செருவிளை கருவிளை போல் 
இன்முகத்து பைரவியாய் 
பலம் சேர்க்கும் பைங்கிளியோ



July 7, 2017

நல்லதொரு விடியலை நோக்கி..

அஞ்சு பத்து சம்பாதித்தவன்
அயராமல் உறங்குகிறான்..
ஆயிர கணக்கில் சம்பாதிப்பவன்
ஆடிப் போயி கிடக்கிறான்..
இந்திய அரசின் அதிரடி மாற்றத்தால்
இஷ்டப்படி ஆடியவனும் இடிதாக்கிய மரமாய் நிற்கிறான்..
ஏடிம் சாலைகளில் ஈயாய் மொய்கிறான்
இயன்றவற்றை செல்லும் 'மணி'களாய் மாற்றிட..
தடாலடியாய் கொண்டு வந்த சட்டத்தால்
தடம் புரண்டு தான் கிடக்கிறது நடுத்தர வர்க்கம்..
ஏழாந்தேதி வாங்கிய சம்பளத்தில்
சரளாமாய் இல்லாவிட்டாலும்
சிறிதாய் வைத்த சேமிப்பும்
இன்று செல்லா காசுப் பட்டியலில்..
உண்டியலாய் கிடந்த சர்க்கரை டப்பாவும் புடவை மடிப்புகளும்
சத்தமின்றி வெளி வரப்போகிறது
சில்லரைகளாய் மாற்றிட..
வாயாடி கிழவிகளுக்கு
வெற்றிலையாய் இன்றைய விடியல்..
வசைப் பாடியே தின்று தீர்ப்பார்கள்
அரசாளும் அதிகாரிகளை..
சுருக்கு பை நோட்டுகள் யாவும்
சுவடில்லாமல் மறையும் வரை..
புதுமையாய் தெரிந்தாலும்
புயலாய் மாற்றினாலும்
மாசற்ற சமுதாயத்துக்கு
நாமும் கரம் கொடுப்போம்
நல்லதொரு விடியலை நோக்கி..
- சுகி
உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்,
"கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல"
"என்னோடு இருக்கும் கவலைகளும் தீர்ந்து விடும்"
என்னுள் எழும் சங்கடங்களை
சல்லடையாய் நீக்கி
சந்தோஷத்தை தந்தவன் நீ..
ஒற்றை பார்வை போதும்
உன்னை அன்பாய்
என்னிடம் அழைத்து வர...
அலைந்து தொலைந்தாவது
கண்டு கொள்வாய்
உன்னவள் இருக்கும் இடத்தை..
அள்ளி அணைத்து கொள்ள தோன்றும்
அன்பாய் நீ அருகினில் வரும்
நொடித்தோறும்..
தினந்தோறும் சந்தித்த நாட்கள்
மாறி மாதம் ஒருமுறை சந்தித்தாலும்
மங்காமல் ஒளிக்கிறது உன் அன்பு என்றும் ...
சிறு பிள்ளையாய் தான்
மாறி போனேன்
சீண்டி நீ ஆடும் ஆட்டத்தில்...
கள்ளமில்லா உன் அன்பில்
கரைந்தே போகிறேன்
கண் இமைக்கும் நொடித்தோறும்..
கலக்கத்தோடு காத்திருக்கிறேன்
உன் அணைப்பில்
என் சோகத்தை கலைத்திட..

- சுகி



என் வீட்டு செல்லப் பிராணியின் நினைவில்.. Image may contain: one or more people, people sitting, dog, text and outdoor

July 6, 2017

முரணாய் ஒரு முத்தம் !!


அன்னையின் அரவணைப்பில்
அன்பாய் ஒரு முத்தம்
தங்கமென்ன அழைக்கும்
தாத்தாவின் தாங்குதலில்
ஆசையாய் ஒரு முத்தம்
பள்ளிக்கு முன்
பரவசத்தில் முத்தம்
விளையாட்டு கொஞ்சலில்
வரிசையாய் முத்தம்
பிஞ்சில் கைகோர்த்த
உடன் பிறப்புக்கு
கில்லுக்கும் அடிக்கும்
நடுவில் தப்பிக்க ஒரு முத்தம்
விடலையில் தொலைந்த
நினைவுகளை மீட்டெடுக்க
நித்திரையில் முத்தம்
மூணு முடிச்சு முக்திக்கு பின்
முதலாவதாய் ஒரு முத்தம்
மழலை மாதவிக்கு
மங்கையென்றே முத்தம்
முளைக்காத முட்டைக்கு
முன்கூட்டியே முத்தம்
'பா'வான பரவசத்தில்
பிஞ்சு பாதங்களில் முத்தம்
நீ ரசித்த அத்தனை நினைவிலும்
அசலும் வட்டியுமாய்
வரியோடு முத்தம்
இத்தனை முத்தங்கள்
நீ ருசித்தும்
இன்னும் எதற்கு
முரணாய் ஒரு முத்தம்
என் இறுதி படுக்கையில் !!
- சுகி

ஹைக்கூ

நினைவிலே வாழ்ந்து நிஜத்திலே தொலைந்து நித்தமும் வாழ்கிறேன் நீரில்லா கொடியாய் நீயின்றி படரும் என் நீல புன்னகையில் !!