September 1, 2017

கூ.. கூவம்.. கூடாரம்..

கூ.. கூவம்.. கூடாரம்..

கள்ளாட்ட கட்சிக்குள்ளே
கலைபட்டுக்கிடக்கிறது
கதிராமங்கலம் ..

கருக்கும் தீ அங்கு
கருவறுக்க தானோ..
கனவோடு பிறந்த உயிர்கள்
கவலையோடு மறையதானோ..

கதிரருக்கும் கைகளுக்கும்
கட்டாயம் விலக்கில்லை
கடனென்னும் சொத்தோடு
கழுத்தறுத்து உயிரில்லை

குறையில்லா நாடின்று
குழிக்குள்ளே கிடக்கிறது
கல்வித்தரம் குறையுண்டு
கடனோடு கிடக்கிறது

கிடத்தியவன் கேணையென்னில்
கலியுகம்தான் தொடங்கியதோ
கயவனவன் கட்சிதனில்
கலர்கலராய் மலர்கிறதோ

குறைகூறும் கெழவிக்கும்
கூழுக்கு வழியில்லை
கூட்டத்துக்கு போனாளென்றால்
கறிசோறும் மறுப்பதில்லை

கள்ளிப்பால் காலம்போயி
கட்சினாலே மறைகின்றோம்
கேக்காத காதுகளுக்கு
கையில் மையிட்டு அழைக்கின்றோம்

கூடாரம் போட்டுக்கிட்டு மக்களை
கோமாளி ஆக்கியதேன்
கூவத்தூர் கொண்டாட்ட
குழுவிங்கு அடுத்தயிடம் தேடியதேன்

கூரில்லா நாட்டுக்குள்ளே
குதிரோட்டம் விட்டவனெவனோ
கூவநதி கரையினிலே
கழிவுகளை விட்டவனவனோ

கச்சத்தீவும் கிடைக்கவில்லை
கடல்சென்ற மீனவனும் கரையிலில்லை ..
காணாமல் போனோர் பட்டியலில் சேர்ந்தது போதும்
களையான ஆட்சிக்கு முற்றொன்று வைத்திடுவோம்

- சுகி 

No comments:

Post a Comment