July 7, 2017

நல்லதொரு விடியலை நோக்கி..

அஞ்சு பத்து சம்பாதித்தவன்
அயராமல் உறங்குகிறான்..
ஆயிர கணக்கில் சம்பாதிப்பவன்
ஆடிப் போயி கிடக்கிறான்..
இந்திய அரசின் அதிரடி மாற்றத்தால்
இஷ்டப்படி ஆடியவனும் இடிதாக்கிய மரமாய் நிற்கிறான்..
ஏடிம் சாலைகளில் ஈயாய் மொய்கிறான்
இயன்றவற்றை செல்லும் 'மணி'களாய் மாற்றிட..
தடாலடியாய் கொண்டு வந்த சட்டத்தால்
தடம் புரண்டு தான் கிடக்கிறது நடுத்தர வர்க்கம்..
ஏழாந்தேதி வாங்கிய சம்பளத்தில்
சரளாமாய் இல்லாவிட்டாலும்
சிறிதாய் வைத்த சேமிப்பும்
இன்று செல்லா காசுப் பட்டியலில்..
உண்டியலாய் கிடந்த சர்க்கரை டப்பாவும் புடவை மடிப்புகளும்
சத்தமின்றி வெளி வரப்போகிறது
சில்லரைகளாய் மாற்றிட..
வாயாடி கிழவிகளுக்கு
வெற்றிலையாய் இன்றைய விடியல்..
வசைப் பாடியே தின்று தீர்ப்பார்கள்
அரசாளும் அதிகாரிகளை..
சுருக்கு பை நோட்டுகள் யாவும்
சுவடில்லாமல் மறையும் வரை..
புதுமையாய் தெரிந்தாலும்
புயலாய் மாற்றினாலும்
மாசற்ற சமுதாயத்துக்கு
நாமும் கரம் கொடுப்போம்
நல்லதொரு விடியலை நோக்கி..
- சுகி
உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்,
"கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல"
"என்னோடு இருக்கும் கவலைகளும் தீர்ந்து விடும்"
என்னுள் எழும் சங்கடங்களை
சல்லடையாய் நீக்கி
சந்தோஷத்தை தந்தவன் நீ..
ஒற்றை பார்வை போதும்
உன்னை அன்பாய்
என்னிடம் அழைத்து வர...
அலைந்து தொலைந்தாவது
கண்டு கொள்வாய்
உன்னவள் இருக்கும் இடத்தை..
அள்ளி அணைத்து கொள்ள தோன்றும்
அன்பாய் நீ அருகினில் வரும்
நொடித்தோறும்..
தினந்தோறும் சந்தித்த நாட்கள்
மாறி மாதம் ஒருமுறை சந்தித்தாலும்
மங்காமல் ஒளிக்கிறது உன் அன்பு என்றும் ...
சிறு பிள்ளையாய் தான்
மாறி போனேன்
சீண்டி நீ ஆடும் ஆட்டத்தில்...
கள்ளமில்லா உன் அன்பில்
கரைந்தே போகிறேன்
கண் இமைக்கும் நொடித்தோறும்..
கலக்கத்தோடு காத்திருக்கிறேன்
உன் அணைப்பில்
என் சோகத்தை கலைத்திட..

- சுகி



என் வீட்டு செல்லப் பிராணியின் நினைவில்.. Image may contain: one or more people, people sitting, dog, text and outdoor

July 6, 2017

முரணாய் ஒரு முத்தம் !!


அன்னையின் அரவணைப்பில்
அன்பாய் ஒரு முத்தம்
தங்கமென்ன அழைக்கும்
தாத்தாவின் தாங்குதலில்
ஆசையாய் ஒரு முத்தம்
பள்ளிக்கு முன்
பரவசத்தில் முத்தம்
விளையாட்டு கொஞ்சலில்
வரிசையாய் முத்தம்
பிஞ்சில் கைகோர்த்த
உடன் பிறப்புக்கு
கில்லுக்கும் அடிக்கும்
நடுவில் தப்பிக்க ஒரு முத்தம்
விடலையில் தொலைந்த
நினைவுகளை மீட்டெடுக்க
நித்திரையில் முத்தம்
மூணு முடிச்சு முக்திக்கு பின்
முதலாவதாய் ஒரு முத்தம்
மழலை மாதவிக்கு
மங்கையென்றே முத்தம்
முளைக்காத முட்டைக்கு
முன்கூட்டியே முத்தம்
'பா'வான பரவசத்தில்
பிஞ்சு பாதங்களில் முத்தம்
நீ ரசித்த அத்தனை நினைவிலும்
அசலும் வட்டியுமாய்
வரியோடு முத்தம்
இத்தனை முத்தங்கள்
நீ ருசித்தும்
இன்னும் எதற்கு
முரணாய் ஒரு முத்தம்
என் இறுதி படுக்கையில் !!
- சுகி

ஹைக்கூ

நினைவிலே வாழ்ந்து நிஜத்திலே தொலைந்து நித்தமும் வாழ்கிறேன் நீரில்லா கொடியாய் நீயின்றி படரும் என் நீல புன்னகையில் !!

May 31, 2017

என் சமூகம் !!



பேதையென்னும் மங்கையவள்
மலர்ச்சூட கண்டாயோ
மாலையிடும் வேலைதனில்
மெருக்கேற்ற வந்தாயோ
கன்னியிவள் கார்முகிலாய்
காலாட நடமாட
எதிர்வரும் கதிரவனை
காணாமல்  செல்வாயோ..
நேரம்காலம் பாத்துபுட்டு
நேர்த்தியா போறவளே
நெடுந்தூரம் போனாலும்
பிறைக்கு முன்னே சுடரிடவா
பொழுதின்று முடியுமுன்னே
பூமகளாய் போனவளே
ஊர்க்காண ஒழுங்கோடு
நீ இங்கு வந்திடம்மா..
கண்ணாலம் முடிச்சதுமே
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்த மன்னனுக்கு
குறைதீர்ப்பாய் பூங்கொடியே
கால் மாதம் போனபின்னும்
காட்டேரி காத்திருப்பா
கருவொன்னும் காணலேயே
கணவனைதான் பூட்டிவைப்பா..
நிறை மாசம் தாண்டும் முன்னே
புள்ளைய தான் கணிச்சிருப்பா
காளைய பெத்துப்புட்டா
கச்சேரி வெச்சிருவா
கன்னிப்புள்ள பொறந்துபுட்டா
கள்ளிப்பால் கொடுத்துப்புட்டு
கருமாரி ஆக்கிடுவா..
தப்பி பொழச்சப்புள்ள
தடுமாறி போனாலும்
தூக்குல தொங்கவுட்டு
தூர்வாரி பேசிடுவா..
நான் பாடும் தாலாட்டில்
துயில்கொள் என் கண்மணியே
துட்சன் எங்கு வந்தாலும்
வீரம்கொள் பெண்மணியே
சாந்தமாய் நான் வாழ்ந்தும்
சங்கடங்கள் பல சேர்த்த
சேரியென்னும் சமூகத்தில்
சந்தனமாய் நீ மணப்பாயோ !!


- சுகி

May 30, 2017

**☀ வெயில் ☀**



வெஞ்சொனின் வெப்பத்தில் 
 வெண்ணிறாடை மெய்யிங்கு 
கரும்பலகை போட்டுவிட
கற்றாழை பயனில்லை
கம்பங்கூழும் குளிரவில்லை 
கால்கடுக்க நடந்தாலும்
கார்மேகம் காணவில்லை 
முப்பகலாய் நீ வந்து
முழுவதுமாய் தகதகக்க
முதிர் நிலவாய் நான் மாறேன்
கதிரவனுக்கும் கருணையுண்டு 
கார்மேகத்தில் மறைவதுண்டு
கிடைகண்ட கிழங்களுக்கும் 
தப்பிக்க வழியுமுண்டு
வகைவகையாய் கவிப்பாடி
வெண்ணிலவை ரசிக்கும் நாமோ 
இன்று
வெயிலை ரசிக்க மறுப்பதேனோ ?!!

- சுகி

May 29, 2017

** திருநங்கை 👫 **


மானிடராய் பிறவிகொண்டு
மங்கை என்னும் போர்வைபூண்டு
மனிதம் தேடும் செந்நாரை 
முப்பாலாய் முகம்காட்ட..

அலி என்று அழைத்தாலும்
அள்ளி அணைக்கும் அன்னை இவள்
அரவணைத்தே பெயர்போனால்
'அரவான்' என்றே அற்பணித்தாள்..
தள்ளிப்போனு தாளிச்சாலும்
தன்னலமில்லா தங்கமிவள்
 தங்கை என்னும் மங்கையாய்
'திருநங்கை' பெயர்கொண்டாள்..

-சுகி
( திரு + மங்கை = திருநங்கை )

Image may contain: 1 person

** மூக்குத்தி **


முன்னோரு சொன்னாங்கனு
மூத்த மக விசேஷத்தை
மூணு ஊரு கூட்டிவந்து 
கண்ணாலம் பேசிப்புட்டு
முழுசா வளர்ந்த மக
மூக்கு சிந்தாம வாழணுமுன்னு
மூணு கல்லு தோடு ஒன்ன
மூணாம் மாசம் வாங்கி வந்து
முன்கோபம் வந்தாலும்
முரட்டு அடி பட்டாலும்
முந்தானை மனுஷன்கிட்ட
முந்தியடிக்க வேணாமுன்னு
நான் வளர்த்த செல்லக்கண்ணுக்கு
"மூக்குத்தி" நானும் தாரேன்
மூக்கணாம்கயிறாட்ட
கோவமெல்லாம் அடக்கிகிட்டு
மூச்சுடமா வாழு தாயி..

-சுகி

Image may contain: 1 person, close-up

May 25, 2017

**மழைக்கொரு விண்ணப்பம்**

அக்னி தேவனை அரவணைக்க
அன்பாக வந்தாயோ.. இல்லை
அல்லல்படும் மக்களுக்கு 
அமிர்தமாய் வந்தாயோ..
சுட்டெரிக்கும் சூரியனுக்கு
சுடரேற்ற வந்தாயோ.. இல்லை
சருகாய் மடியும் சமானியனின்
சந்தோஷமாய் வந்தாயோ..
பளிச்சன்று பல்லை காட்டும்
பகலவனுக்கு பன்னீராய் வந்தாயோ.. இல்லை
பசுமை மைந்தர்களின் கண்ணீருக்கு
பால் வார்க்க வந்தாயோ..
விடியுமுன் விளையாட்டாயின்றி
வரவேற்பாய் வந்துவிடு..
துவண்டு போன உயிர்களுக்கு
துளியாய் வந்து புத்துயிராய் மாறிவிடு..
களம் காணும் உழவனுக்கு
கஞ்சி ஊற்றவாவது கண்ணீர் விடு..
காலம் கடந்தும் காத்திருக்கும் எங்களுக்கு
கருணையோடு விடைக்கொடு..